480 கிமீ. சைக்கிளில் பயணம் செய்து வந்த மகன்.. பார்த்த சில நிமிடங்களில் உயிரை விட்ட அன்னை!
புதுச்சேரி: புதுச்சேரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயை பார்ப்பதற்கு 480 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை மகன் மேற்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே தாயின் உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கால் விமானம், ரயில், பேருந்து, கார், ஆட்டோ என அனைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
சைக்கிள்
இருந்தபோதிலும், ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால், வெளிமாநிலங்களுக்கு பணிக்கு சென்றவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் பல கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டும், சைக்கிள் மூலமாகவும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பார்ப்பதற்கு 480 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை மகன் மேற்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏனாம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்த ரேவு ஸ்ரீனு. பெயிண்டரான இவர் தனது மனைவி லட்சுமியுடன் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.
சைக்கிள் பயணம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், புற்றுநோயால் அவதிப்பட்ட தனது தாய் மகாலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உறவினர்களால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பேருந்து உள்ளிட்ட எந்தவித போக்குவரத்தும் இல்லாத சூழலிலும் தனது மனைவி லட்சுமியுடன் தனித்தனி சைக்கிளில் ரேவு ஸ்ரீனு ஏனாமிற்கு புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் இத்தம்பதியை போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், தேவையான உதவிகளை கிராம மக்கள் மற்றும் போலீசாரிடம் பெற்று சுமார் 480 கி.மீ. பயணம் மேற்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
தாய் மரணம்
இதனிடையே வெளி மாநிலத்தில் இருந்து ரேவு ஸ்ரீனு, லட்சுமி இருவரும் ஏனாம் வந்ததால் அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். பின்னர் தாயை பார்க்க அனுமதித்தனர். தனது மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே மகாலட்சுமியின் உயிர் பிரிந்தது.