ஒன்னா இருந்த கிரண்பேடியும், நாராயணசாமியும் இப்படி மாறீட்டாங்களே.. சபாநாயகர் சிவகொழுந்து வேதனை
புதுச்சேரி: அறிக்கை போரை தவிர்த்து, இணைந்து செயல்படுங்கள் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் சபாநாயகர் சிவக்கொழுந்து வலியுறுத்தியுள்ளார்.
கோரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் புதுச்சேரியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் தவிப்பில் உள்ளனர். இச்சூழலில் தொடர்ந்து ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து துணை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் அனைவரும் சிறப்பாக பணிபுரிகின்றனர். அதே வேளையில் துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அறிக்கை போரில் ஈடுபடுவது வேதனை தருகிறது. ஆளுநராக கிரண்பேடியை அறிவித்தபோது, மிகத்திறமையான பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்கின்ற நாட்டின் மிக நேர்மையாக பணியாற்றிய ஒருவரை ஆளுநராக பெறுகிறோம் என்ற மகிழ்வில் இருந்தோம். அதேபோல் முதல்வராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டபோது மன்மோகன்சிங் அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றிய மத்திய அமைச்சர் புதுச்சேரியை ஆள போகிறார் என மகிழ்ந்தோம். உண்மையில் முதல் ஆறு மாதங்கள் நல்ல புரிதல் உணர்வுடன் இருவரும் நிர்வாகத்தை அளித்தனர்.
யார் கண்பட்டதோ, யார் சூழ்ச்சி செய்தார்களோ தெரியவில்லை. இன்று நிலைமை மாறி புதுச்சேரியில் மக்கள் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். யார் சொல்வதை கேட்பது என அதிகாரிகள் தெரியாமல் மாற்றி, மாற்றி செயல்படுகிறார்கள். இக்கட்டான சூழளில் மக்கள வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இருவரும் இணைந்து பணிபுரியாவிட்டால் புதுச்சேரியின் நிலை மிக மோசமாகிவிடும்.
அதனால் இருவரும் இணைந்து புதுச்சேரியில் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். இது என் வேண்டுகோள். நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் புதுச்சேரிக்கு வரவேண்டிய நலத்திட்டங்களும் சரியான நிர்வாகமும் தடையில்லாமல் புதுச்சேரிக்கு கிடைக்கும்.
இவ்வளவு சங்கடத்திலும் இதர மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரி அனைத்திலும் சிறந்துள்ளது. ஆளுரும், முதல்வரும் இணைந்து பணியாற்றினால் புதுச்சேரி ஈடில்லாமல் ஜொலிக்கும். இதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்று நானும் புதுச்சேரி மக்களும் நம்புகிறோம். ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ அறிக்கை போரில் ஈடுபட வேண்டாம். அதை மக்கள் விரும்பவி்ல்லை என்பதை உணருங்கள். அனைவரும் இணைந்து புதுச்சேரிக்கு நல்லதை செய்யுங்கள் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.