தந்தையைப் பார்க்க நாராயணசாமி மகளுக்கு மத்திய படை தடை.. போராட்டத்தில் குதித்தார்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயக்குமாரி தனது தந்தையைப் பார்க்க வந்தபோது மத்திய படையினர் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரும் மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ சிவாவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக தர்ணா போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஆளுநர் மாளிகைக்கு எதிரே போராட்டம் நடைபெறுவதால் மத்திய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போராட்டம் நடைபெறும் பகுதியில் யாரையும் அனுமதிக்க அவர்கள் மறுத்து வருகின்றனர். இன்று காலை சிறுநீர் கழிக்க அமைச்சர் கந்தசாமி வெளியே போக முயன்றபோது அவரை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை இன்னொரு பரபரப்பு அரங்கேறியது.
நாராயணசாமி மகள்
தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்திற்கு காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரியும் வந்தார். தந்தையைப் பார்க்க செல்வதாக அவர் கூறியும் கூட துணை ராணுவப் படையினர் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவரும், அவருடன் வந்த மகளிர் காங்கிரஸார், திமுகவினரும் அப்படியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். மகளிர் காங்கிரஸாருடன் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜ்நாத் சிங்குக்கு வைத்திலிங்கம் கடிதம்
இதற்கிடையே, புதுச்சேரியின் தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்த தகுதியான இடைக்கால நிர்வாகியை அனுப்ப வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கிரண் பேடியின் தலையீடு
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7 ம் தேதி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி ஒரு கடிதம் எழுதினார். அதற்கு உரிய பதில் வராததால் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கிரண் பேடி சரியில்லை
இந்த அசாதாரண சூழல் குறித்து அறிவதற்காகவும், நம்மால் இப்பிரச்சினையை தீர்க்க முடியுமா என முயற்சிப்பதற்காகவும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்றேன். அப்போது துணைநிலை ஆளுநர் விரும்பினால் இருதரப்புக்கும் இடையில் பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்க்கலாம் என பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்தேன். ஆனால் அதற்கு துணைநிலை ஆளுநரிடமும் உரிய பதில் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடத்தும் ஒரு அசாதாரண சூழலில் ஒரு நிர்வாகி அதை தீர்த்து வைக்க கவனம் செலுத்தாமல் வெளியூர் சென்றிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தலையிடுங்கள்
இச்சூழலில் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கருதுகிறேன். மேலும் நீங்கள் உள்துறையை சேர்ந்த உயர் அதிகாரியை அனுப்பி பிரச்னையை தீர்க்க முயல வேண்டும் அல்லது இச்சூழலை திறமையாக கையாண்டு, புதுச்சேரி நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு தகுதியான இடைக்கால நிர்வாகியை அமர்த்த இவ்வாறு அதில் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.