பகைக் கூட்டத்தை கிழித்தெறிவோம்.. மோசடி அரசுகளை வீட்டுக்கு அனுப்புவோம்.. புதுச்சேரியில் ஸ்டாலின்
Recommended Video
புதுச்சேரி: பகை கூட்டத்தை கிழித்தெறிய நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பொதுகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தமிழகத்தில் வெகுவிரைவில் முதலமைச்சராக ஸ்டாலின் வரவுள்ளார். புதுச்சேரி வளர்ச்சிக்காக தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி நிறைய உதவிகளை செய்திருக்கிறார். கருணாநிதி வழியில் ஸ்டாலினும் புதுச்சேரிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எதிராக தொல்லை கொடுத்து வரும் கிரண்பேடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகன். ராகுல்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை மற்றொரு கதாநாயகன். மத்தியில் ராகுல்காந்தி பிரதமரான உடனேயே நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும். நாளை நமதே. நாற்பதும் நமதே. மத்தியில் ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு அனைத்து திட்டங்களை கொண்டுவரப்படும். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற்றால் புதுச்சேரியில் வீட்டு வரி, குப்பை வரி குறைக்கப்படும் என்றார் முதலமைச்சர் நாராயணசாமி.
மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் நாராயணசாமியை தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 18 ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் மத்தியில் சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்பக்ககூடிய தேர்தல். தேர்தலுக்கு மட்டுமல்ல எப்போதும் உங்களிடத்தில் இருக்ககூடியவர்கள் நாங்கள். கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடைபெறக்ககூடிய தேர்தல் இந்த தேர்தல். அவர் இல்லையென்றாலும், அவருடைய உணர்வுகள், லட்சியங்கள் எப்போதும் நம்மோடு உடன் இருந்துகொண்டிருக்கிறது.
நாராயணசாமிக்கு நன்றி சொல்கிறேன்
புதுச்சேரி எனக்கு புதிதல்ல. புரட்சி முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி இறந்தபோது அதிமுகவினர் கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தினர். ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலைஞரின் பெயரில் சாலை, காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர், கலைஞருக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை வைக்கப்படும் என கூறினார். அவருக்கு இந்த நேரத்தில் தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
கிழித்தெறிய கூடியிருக்கிறோம்
தொடர்ந்து பேசிய அவர், பகை கூட்டத்தை கிழித்தெறிய நாம் இங்கு கூடியிருக்கிறோம். இதே புதுச்சேரியில் திராவிட கழகத்தின் மாநாட்டில் சிவகுரு வேடத்தில் கலைஞர் நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடித்ததற்காக ஒரு சில கயவர்கள் கலைஞரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். அப்போது புதுச்சேரி மக்களும், தந்தை பெரியாரும் கலைஞருக்கு ஆதரவு அளித்தார். கலைஞரையும், தந்தை பெரியாரையும் இணைத்த ஊர் புதுச்சேரி. கலைஞர் கருணாநிதி ஒருபோதும் புதுச்சேரியை கைவிட்டது கிடையாது. இப்போது சேர்ந்துள்ள கூட்டணி 40 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்த கூட்டணி.
ரங்கசாமி மீது பாய்ந்த ஜெயலலிதா
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பற்றி மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைத்தவர் ரங்கசாமி என கூறியிருக்கிறார். ஜெயலலிதா எதிர்த்தவரோடு தற்போது புதுச்சேரியில் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். பாமக வன்முறை கட்சி என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். அதிமுகவை திமுக விமர்சனம் செய்யும். ஆனால் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாது. ஆனால் ராமதாஸ் தரம் தாழ்ந்து அதிமுக அரசையும், எடப்பாடி பழனிச்சாமியையும் தரம் தாழ்ந்து பேசினார். ஆனால் அவர்களோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளனர்.
பொள்ளாட்சியே சாட்சி
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பொல்லாத ஆட்சிக்கு ஒரே சாட்சி பொள்ளாட்சி சம்பவம். அதேபோல் புதுச்சேரியில் பொருந்தாத கூட்டணியை அதிமுக வைத்துள்ளனர். பாஜக 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என சொன்னார்கள். ஆனால் ஒருவருக்குகூட வேலை கொடுக்கவில்லை. வங்கி கணக்கில் 15 லட்சம் போடப்படும் என சொன்னார்கள். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே வடிவேல் கூறுவது போல் வரும் ஆனா வராது. தற்போது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கனவுகானும் தேர்தல் அறிக்கை. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பலகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மோடி வெளிநாடு வாழ் பிரதமர். கலைஞர் பிறந்த நாளான ஜீன் 3 ஆம் தேதி மோடி காலியாகிவிடுவார்.
மோசடி மோடி
மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என்று வாக்குறுதி அளித்து கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரால் ஏன் மாநில அந்தஸ்து வாங்கி தர முடியவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுகதான். இந்தியாவுக்கு பிரதமர் மோடி, தமிழகத்தில் எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என மூன்று பேரும் உள்ளனர். நாட்டை நாசமாக்க ஆளுநர்கள் உள்ளனர். தமிழக ஆளுநர் தனியாக ஒரு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதை தட்டி கேட்க எடப்பாடிக்கு தைரியம் இல்லை. ஆனால் புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் அராஜகத்தை முதலமைச்சர் நாராயணசாமி எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த பிரதமர் ராகுல்
ராகுல்காந்தியே புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கூறியிருக்கார். ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர். நிச்சயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். கிரண்பேடியின் ஆணவத்தை அடக்க, அவரை விரட்ட அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி தொடர திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் நாங்கள் சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். கலைஞர் இந்த தேர்தலில் இல்லை. அண்ணனுக்கு பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கிறார் என்றார் ஸ்டாலின்.