ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டு
புதுச்சேரி: ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக லேசான சீற்றத்துடன் காணப்படுகிறது.
Recommended Video
தயாராக இருங்கள்.. ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் புயல்.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை தென்கிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுமையான சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, சென்னை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலுக்கு ஆம்பன் புயல் என தாய்லாந்து நாடு பெயரிட்டுள்ளது. மேலும் இந்த புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் - வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரை ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்தே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோல் தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமலில் உள்ளது. இந்த புயலால் மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும், ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக கரையோரம் நிறுத்தி வைத்திருந்த தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மீனவர்கள் இடமாற்றம் செய்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இன்று மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கடலும் வழக்கத்திற்கு மாறாக லேசான சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.