விலை உயர்ந்த செல்போன் வாங்க... குழந்தையை கடத்திய மாணவர் கைது... சிசிடிவியில் சிக்கினார்
புதுச்சேரி: புதுச்சேரியில் விலை உயர்ந்த செல்போன் வாங்க பணம் இல்லாததால் எதிர் வீட்டு குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருக்கானூர் அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலிசார் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையை ஒளித்து வைத்துவிட்டு, கடத்தப்பட்டதாக நாடகமாகிய இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடித்தனர்.
திருச்சானூர் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் - அலங்கார ரூபினியாய் எழுந்தருளிய பத்மாவதி தயார்
எதிர் வீட்டில் வசிக்கும் மாணவர்
புதுச்சேரி மாநிலம் திருக்கானூர் அருகே உள்ளது மூங்கில்பட்டு கிராமம். இங்கு வசிக்கும் அன்பழகன் என்ற விவசாயிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அன்பழகனின் எதிர்வீட்டில் வசித்து வருபவர் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்துவரும் உதயன். அன்பழகன் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே உதயனும் வசிப்பதால் நட்பு ரீதியாக இருவருக்குமே பழக்கம் உள்ளது. அதுமட்டுமின்றி கல்லூரி மாணவரான உதயன் குழந்தையை அடிக்கடி அருகில் இருக்கும் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம். அதனால் உதயன் மீது எந்த சந்தேகமும் குடும்பத்தாருக்கு இல்லை. வழக்கம்போல் நேற்று குழந்தையை தன்னுடைய பைக்கில் அமரவைத்து சென்றுள்ளார் உதயன்.
குழந்தை கடத்தல் என புகார்
பின்னர் சிறிது நேரத்தில் தன்னுடைய சட்டையை கிழித்துக் கொண்ட உதயன் நேராக திருக்கனூர் காவல் நிலையம் சென்றார். அங்கே பதறியடித்தபடி தன்னுடைய பைக்கில் குழந்தையை அழைத்து சென்றதாகவும், அய்யனார் கோயில் அருகே செல்லும்போது மர்ம நபர்கள் என்னைத் தாக்கிவிட்டு குழந்தையை கடத்தி சென்றதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி தற்போது கடத்தல் கும்பல் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி மூலம் சிக்கினார்
இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வளர் வேலு தலைமையில் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல்வேறு கடைகளுக்கு குழந்தையை, உதயன் அழைத்து சென்றது தெரியவந்தது. இதை அடுத்து உதயன் மீதே சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்த அதை ஆய்வு செய்தனர். அதில் எதிர் தரப்பில் இருந்து யாரும் பேசியதாக தெரியவில்லை. சில நிமிடத்தில் அந்த செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய பெண் ஒருவர், "குழந்தையை என்னிடம் விட்டு விட்டு எங்கே சென்றாய்? எப்போது வருவாய்" எனக் கேட்டுள்ளார். பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் லாவகமாக பேசி காவல்நிலயம் வரவழைத்தனர்.
குழந்தையை கடத்தியவர் கைது
தான் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட உதயன், அந்த பெண்ணை தெரியாது என்றும் குழந்தையை வைத்திருக்கும் அந்த பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் போலீசார் தங்களுடைய பாணியில் உதயனிடம் விசாரிக்க ஆரம்பிக்க அவர் உண்மையை ஒத்துக்கொண்டார். விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கப்பட்ட உதயன், அதற்கு பணம் இல்லாததால் இந்த கடத்தல் நாடகத்தை நிகழ்த்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு தந்தை அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டது.