போராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு
புதுச்சேரி: கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 19 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நாளை மறுதினம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொள்ள உள்ளதால் பல்கலைக்கழகம் மத்திய ரிசர்வ் படை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் இன்று 19 வது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு கல்லூரி மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெங்கையா நாயுடு
இதனிடையே பல்கலைக்கழகத்தில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். ஆனால் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு வரும் வெங்கையா நாயுடுவை முற்றுகையிடுவது, கருப்பு கொடி காட்டுவது என பல்வேறு போராட்டங்களுக்கு மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக, எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, பல்கலைக்கழக வளாகம் மத்திய ரிசர்வ் படை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மேலும் கோபமடைந்துள்ளனர்.
ஏன் உயர்த்தப்பட்டது
இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கல்வி கலாச்சாரத்தை சீர்குலைப்பதற்காக மாணவர்களில் ஒரு சிலர் கல்வி கட்டண உயர்வு தொடர்பான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வளர்ந்துவரும் செலவினங்களை சமாளிப்பதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து பெண் மாணவர்களுக்கும் இலவச விடுதிகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் புதுவை பல்கலைக்கழகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடந்தது
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி ஒருவர் பட்டத்தை வாங்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வருகையையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரது வருகையின் போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக இன்று மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பலத்த பாதுகாப்பு
புதுச்சேரி விமான நிலையத்தில் வெங்கையா நாயுடு வந்து இறங்கியதும், அவரை பாதுகாப்புடன் பல்கலைக்கழக விழா இடத்திற்கு அழைத்து செல்வது போல ஒத்திகை செய்யபட்டது. 26 கார்கள் அணிவகுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் பகுதியில் சென்றது. அந்த வழியாக செல்லும் போக்குவரத்தை நிறுத்துவது, பொதுமக்களை அறிவுறுத்துவது போன்ற பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு இருந்தனர். டிஜிபி பாலாஜி வச்தவா தலைமையில் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அனைத்து பிரிவு காவலர்களுக்கு பங்கேற்றனர்.