ஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு
புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கைகளால் பட்டம் பெறப்போவதில்லை புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு 322 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார்.
இதனிடையே குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மேலும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கத்தினர் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக இரண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெறவுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கார்த்திகா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் அருண்குமார் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவரின் கைகளால் பட்டங்களை பெறப்போவதில்ல என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி கார்த்திகா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய முடியும். இந்த மசோதாவை சட்டமாக்கிய குடியரசு தலைவரிடமிருந்து பட்டத்தை பெற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரிடமிருந்து பட்டங்களை பெறப்போவதில்ல என மாணவர்கள் இருவர் கூறியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை குடியரசு தலைவர் வரும்போது மாணவர்கள் தடையை மீறி ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க பல்கலைக்கழகத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.