100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள்
புதுவை: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக புதுச்சேரியில் மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேசிய கொடியை கையிலேந்தியவாறு 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.
நாட்டின் 73 வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த நவீன் குமார், ரஞ்சித் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆழ்க்கடல் சென்று தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
இந்த முயற்சியானது தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாகவும், சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தேசியக் கொடியை கையிலேந்தியவாறு நீச்சலடித்து பயணம் மேற்கொண்டனர்.
ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் இந்த சாகச பயணம் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நீச்சல் வீரர்கள் கூறுகையில் ஆழ்கடலுக்கு சென்ற சாதனையை விட தேசியக் கொடியை அதுவும் சுதந்திர தினத்தன்று கையில் ஏந்தி ஆழ் கடல் சென்றது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
இமயமலையில் தேசியக் கொடியை பறக்கவிட்டதை அடுத்து நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இந்த முயற்சியை மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.