தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல்? கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை
புதுச்சேரி: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் கடுமையான காய்ச்சலால் கேரளாவில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதாக சந்தேகம் எழுந்திருப்பதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்து வருகிறார்கள்.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் அறிகுறியுடன் அங்கு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக எல்லையில் மருத்துவக்குழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் கடலூரை சேர்ந்த நடராஜன் (வயது 55) என்பவர் 'நிபா' வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 10-ந் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். இவர் கேரள மாநிலம் குருவாயூரில் வேலை செய்து வந்தார். அங்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சொந்த ஊரான கடலூருக்கு திரும்பி இருந்தார். கேரளாவில் இருந்து திரும்பியதால் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என கருதி ஜிப்மரில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
புளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்
சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, நிபா வைரஸ் உள்ளதா என கண்டறிய புனேவில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் நடராஜனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது ஆய்வில்தெரியவந்தது. அதேநேரம் மூளைக்காய்ச்சல் காரணமாக நடராஜன் உயிரிழந்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேரள மாநிலத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.