வாடகைக்கு வீடு எடுத்து வழிப்பறி... தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் கைது
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ரவுடிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரவுடிகள் மீது தமிழ்நாட்டில் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான ரவுடிகளிடம் இருந்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் எங்கு தெரியும் - என்னென்ன சிறப்பம்சம்
புதுச்சேரியில் தொடர் திருட்டு
புதுச்சேரியில் சமீப காலமாக அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதாக அடிக்கடி போலீசாருக்கு புகார்கள் சென்றது. லாஸ்பேட்டை ,
உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில்தான் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து புதுச்சேரி சீனியர் எஸ்.பி. லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அதிகம் புகார்கள் வந்த பகுதிகளில் தனிப்படையினர் குற்றவாளிகள் யார் என விசாரித்து வந்தனர்.
தமிழ்நாடு ரவுடிகள்
அங்கிருந்த சிசிடிவி மற்றும் சில ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வருவது நாவற்குளம் பகுதியில் தங்கியிருந்த 4 பேர் என தெரியவந்தது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுவதற்காகவே புதுச்சேரி நாவற்குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்த 4 பேரை கைது செய்தனர்.
ரூ.14 லட்சம் மதிப்பு நகை பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள் மதுரையை சேர்ந்த கார்த்திக், ராம்கி, உண்டியல் செந்தில், மற்றும் சிவகங்கையை சேர்ந்த டக்கி பெருமாள் என்கிற ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள 38 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேடப்படும் குற்றவாளிகள்
கைதானவர்கள் தமிழகத்தில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிகள் என்றும் கார்த்தி என்பவர் மீது 28 வழக்குகளும், ராம்கி என்பவர் மீது 6 வழக்குகளும், ஆனந்தராஜ் என்பவர் மீது 5 வழக்குகளும், செந்தில் என்பவர் மீது 17 வழக்குகளும் உள்ளதாகவும் புதுச்சேரி மாநில சீனியர் எஸ்.பி. சீனிவாசன் செய்திளார்களுக்குத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுத்த பாட்டில் மணி என்ற ரவுடியை தேடி வருவதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.