தைப்பூசத்தில் உலா வந்த ஜங்க் புட் முருகர்.. கலக்கிய விழிப்புணர்வு.. அசத்திய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் முருகப் பெருமானுக்கு ஜங்க் புட் உணவு பொட்டலங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற்றது.
குழந்தைகள் இதுபோன்ற தின்பண்டங்களைத் தவிா்க்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனா்.
தைப்பூச விழா நேற்று புதுச்சேரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
கதிர்காமம் முருகன் கோவில், ரெயில்நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியன் கோவில், முதலியார்பேட்டை வெள்ளாள வீதி முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் பால்குடம், காவடி ஊர்வலங்களும் நடந்தன.
இந்நிலையில் புதுச்சேரி அருகே செல்லிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செல்வ முருகன் கோயிலின் 86 வது தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் செல்லிப்பட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீமிதித்தும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயிலில் தீமிதி விழா நடைபெறுவது இந்தக் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கூடப்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற நிமிலீஸ்வரா் முருகப் பெருமானுக்கு தைப்பூசத்தையொட்டி, ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்வது வழக்கம்.
இந்தாண்டு ஜங்க் புட் உணவுப் பொட்டலங்களால் அலங்காரம் செய்யப்பட்ட முருகப் பெருமானை அலகு குத்திய பக்தா்கள் ஊா்வலமாக இழுத்து வந்தனா். இந்த உணவுப் பொருள்களை குழந்தைகள் சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஊா்வலம் நடத்தப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.