புதுவையில் பரபரப்பு.. வாஷிங் மெஷினுக்குள் சுருட்டி கொண்டு கிடந்த 5 அடி நீள நல்ல பாம்பு
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் குடியிருக்கும் ஒருவரது வீட்டு வாஷிங் மெஷினுக்குள், பாம்பு இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் அருகேயுள்ள காக்காயன்தோப்பு பகுதியில் உள்ள சீனிவாசன் நகரில் 63 வயதான சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார் சார்லஸ் ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் சார்லஸின் மனைவி துணி துவைப்பதற்காக அவர்களது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை இயக்க முயற்சித்துள்ளார். இதற்காக சுவிட்ச் போட்ட போது வாஷிங் மெஷின் வேலை செய்யவில்லை. உடனே இதை தனது கணவர் சார்லசிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சார்லஸ் டார்ச் லைட் அடித்து வாஷிங் மெஷின் உட்புறம் பார்த்து உள்ளார்.
அப்போது வாஷிங் மெஷின் உள் பகுதியில் பாம்பு ஒன்று சுருட்டிக் கொண்டு கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் உடனடியாக புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்துஉடனே வனத்துறை ஊழியர்களான கோபி, செந்தாமரைசெல்வன் ஆகியோர் பாம்பு பிடிக்கும் கருவியுடன் சார்லஸ் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
அங்கு வாஷிங் மெஷின் மெக்கானிக் உதவியுடன் வாஷிங் மெஷினை கழற்றி, உள்புறம் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். வெளியே எடுத்து பார்த்த போது அந்த பாம்பு, சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு என தெரியவந்தது.
இதையடுத்து அந்த நல்ல பாம்பை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்த ஏசி இயந்திரத்தில் 3 மாதங்களாக சாரை பாம்பு ஒன்று இருந்தது. அதை வனத்துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் வைரலாக பரவியது
இந்நிலையில் மீண்டும் புதுவை மாநிலத்தில் வீட்டு உபயோக பொருளான வாஷிங் மெஷினில் பாம்பு கண்டறிந்து மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.