எல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக.. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க!
புதுவை: மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக புதுச்சேரியில் ராஜ்யசபா சீட்டை பா.ஜ.க.வினர் கேட்டு வருகின்றனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ந் தேதியே தொடங்கி விட்டது. இந்த ராஜ்யசபா சீட்டை பெற கடும் போட்டியே நடந்து வருகிறது.
இ.பி.எஸ், கவர்னர் ஆர்.என்.ரவியுடன்.. மத்திய அமைச்சர் முருகன், அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி!
எல்.முருகன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க என முன்று கட்சிகளும் அந்த இடத்தை கேட்டு வருகின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரை மத்திய அமைச்சராக உள்ள தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அந்த சீட்டை கேட்டு வருகிறது.
ஆலோசனைக்கூட்டம்
இந்த நிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் தனியார் விதியில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராஜ்யசபா சீட்டு தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
ராஜ்யசபா சீட்
புதுச்சேரி சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க.விற்கு ராஜ்யசபா சீட் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கட்சியின மேலிடமும் உறுதி செய்துள்ளதால் இந்த தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம் என்று கூறினார்.
ஆதரவு கோரினார்கள்
மேலும் ராஜ்ய சபா தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சீட் ஒதுக்கப்படுமா? என அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார். இதன்பிறகு அனைத்து பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்கு சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்து ராஜ்யசபா தேர்தலில் பாஜக போட்டியிட ஆதரவு கோரினார்கள்.
இரு எம்.பி.க்கள்
யூனியன் பிரதேசமான புதுவையில் இரு எம்.பி.க்கள் உள்ளனர். மக்களால் தேர்வான மக்களவை உறுப்பினராக காங்கிரஸைச் சேர்ந்த வைத்திலிங்கம் உள்ளார். எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைதால் ஒரு இடம் காலியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.