அரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கின்போது புதுச்சேரி அரசின் சாராய ஆலையில் இருந்து 10 லட்சம் லிட்டர் சாராயம் திருடுபோனதாக கூறப்படும் புகாரை, சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்கு பிறகு மதுபானக் கடைகளை திறப்பதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று ஒப்புதல் அளித்ததால், நாளை திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனிடையே ஊரடங்கு அமலில் இருந்தபோது பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மதுபான கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் 100 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. மேலும் மது கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் மற்றும் போலீசார் என 8 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சாராயக் கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யும் புதுச்சேரி அரசின் வடிசாராய ஆலையில், ஊரடங்கு அமலில் இருந்தபோது 10 லட்சம் லிட்டர் சாராயம் திருடி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இந்த கொள்ளை குறித்து விசாரிக்க வேண்டி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் மனு அளித்தார். அத்துடன் ஆலையின் நிர்வாகத்தில் இருந்தவர்களோடு சிலர் ரகசிய கூட்டணி அமைத்து, பல கோடி மதிப்புள்ள சாராயத்தை கொள்ளையடித்து, வரி ஏய்ப்பு செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். எனவே ஆளுநர் கிரண்பேடி வடிசாராய ஆலையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்
இந்த குற்றச்சாட்டை, வடிசாராய ஆலை தலைவரான ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி மறுத்ததோடு, குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகணுக்கு சவால்விட்டார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐயின் பார்வைக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் வடிசாராய ஆலை விவகாரம் குறித்து சி.பி.ஐ. விரைவில் விசாரணை நடத்தும் என தெரிகிறது.