144 தடைக்கு மக்களிடம் நோ ரெஸ்பான்ஸ்.. 31ம் தேதி வரை ஊரடங்கு.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் நாராயணசாமி பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோதும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவில்லை. புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே உள்ளது. புதுச்சேரி மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த, புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இருசக்கர வாகனங்களிலும் யாரும் வெளியே செல்லக்கூடாது. வரும் 31 ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்கும்.
இது சூப்பர்ல.. ஒரு சீட்டுல ஒருத்தர் மட்டும்தான்.. ப்ரீயா உட்காருங்க.. கொரோனா அலர்ட்!
மேலும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்கி செல்ல மட்டும் அனுமதி. ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்றார். மேலும் புதுச்சேரியில் கொரோனா அறிகுறியுடன் 515 சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர் என்றார்.