நடு ரோட்டில் வைத்து போலீசை தாக்கிய பார் ஓனர்.. ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஆத்திரம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மதுபானக் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல், மூன்று கட்டமாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட 24 சாலைகளில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து வருகின்றன. இவற்றை அகற்ற கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில மாதங்களாக போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடையின் அறிவிப்பு பலகை அகற்றப்படாமல் இருந்தது.
புதுச்சேரிக்கு போலாமா.. 5 லிட்டர் கேன் பீர் அறிமுகம்.. களை கட்டும் புத்தாண்டு!
இதனால் நேற்று அங்கு சென்ற அரசு ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மதுபானக்கடை உரிமையாளர் ராஜ்குமார் என்பவர், பெரிய இரும்பு கம்பியை கொண்டுவந்து அரசு ஊழியர்களையும், போலீசாரையும் மிரட்டினார்.
ஒருகட்டத்தில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமார், அரசு ஊழியர் ஒருவரையும், போலீசாரையும் தாக்கினார். இதில் காயமடைந்த போலீசார் ஒருவர் காலாப்பட்டு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகளை கொண்டு மதுபானக்கடை உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.