நிர்வாண மசாஜ் செய்யலாம் வாங்க.. ஏமாந்த தொழிலதிபர்.. பிரேமா உள்பட 3 பேர் கைது
புதுச்சேரி: மசாஜ் செய்ய வரவழைத்து தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டி 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி திருமுடிசேதுராமன் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (63) தொழிலதிபர். இவர் அவ்வப்போது புதுவை லாஸ்பேட்டை லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே இருக்கும் மசாஜ் சென்டருக்கு செல்வது வழக்கம். அந்த மசாஜ் சென்டரை தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த ராஜேஷ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் ராஜேஷ், செல்போன் மூலம் மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு, தன்னுடைய மசாஜ் சென்டரின் புதிய கிளை முதலியார்பேட்டை ஞானசம்மந்தர் வீதியில் திறந்திருப்பதாகவும், அங்கு இளம் அழகிகள் இருப்பதாகவும், வந்தால் அழகிகள் மசாஜ் செய்துவிடுவார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ஆசை யாரை விட்டது. இளம் அழகிகள் என்றதும், மஞ்சுநாத்துக்கு ஆசை அதிகமாகியுள்ளது. இரண்டு நாள் கழித்து ராஜேஷ் குறிப்பிட்ட இடத்திற்கு மஞ்சுநாத் சென்றுள்ளார். அங்கு சென்ற மஞ்சுநாத் அதிர்ச்சியடைந்தார். ராஜேஷ் கூறியதுபோல மசாஜ் செய்வதற்கான எந்த தடயமும் அங்கு இல்லை. அழகிகளும் இல்லை.
இதுகுறித்து அவர் ராஜேஷிடம் கேட்டபோது ராஜேஷ் அவரை மிரட்டியுள்ளார். பெண்ணாசையால் இங்கு வந்ததை எல்லோரிடமும் கூறிவிடுவேன் என அவர் கூறி, மஞ்சுநாத் வைத்திருந்த ரூபாய் 1000 ரொக்கப்பணம், அவரது விலை உயர்ந்த செல்போன், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டுள்ளார். மேலும் அவரது செல்போனில் கூகுள்பே மூலம் ரூபாய் 5 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இதுகுறித்து மஞ்சுநாத் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு தனிப்படை அமைத்து ராஜேஷை தேடி வந்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜேஷ், அவருடைய மனைவி பிரேமா, நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் சேலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் சேலம் சென்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜேஷ் மற்றும் அவரது உறவினர் ராதா ஆகியோரது வங்கிக்கணக்கில் இருந்த ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரம் முடக்கி வைக்கப்பட்டது. மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மசாஜ் செய்ய வந்த மஞ்சுநாத்தை அவர்கள் நிர்வாணப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பணம் பறித்த விவரத்தை யாரிடமாவது சொன்னால் அந்த படங்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் இதுபோன்று ஆசைவார்த்தை கூறி வேறு யாரிடமாவது பணத்தை பறித்துள்ளனரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.