2017ல் போட்ட "விதை".. பதவியிலிருந்து போன பிறகும்.. நாராயணசாமி அரசை வீழ்த்திய கிரண் பேடி!
புதுச்சேரியில் கிரண்பேடியின் அன்றைய அரசியலே அனைத்துக்கும் காரணம் ஆகும்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு இன்று கவிழ முக்கியக் காரணமே கிரண் பேடி 2017ம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான். ஆம், அவர் நியமித்த 3 நியமன எம்எல்ஏக்களை வைத்துதான் நாராயணசாமி அரசைக் கவிழ்த்துள்ளனர். அதை விட முக்கியமாக கிரண்பேடி வந்தது முதலே நாராயணசாமி அரசுக்கு எதிராகத்தான் செயல்பட ஆரம்பித்தார். இன்று அவர் போன பிறகு அவரது கனவு நனவாகியுள்ளது.
புதுச்சேரி வித்தியாசமான ஒரு பிராந்தியம்... பெரும்பாலும் இது தேசியக் கட்சிகளுக்கே அதிக ஆதரவைக் கொடுத்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ்தான் இங்கு பெரும்பாலும் ஆட்சியில் அமர்ந்துள்ளது... திராவிடக் கட்சிகளுக்கு இங்கு பெரிதாக ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் கொடுத்தது இல்லை.
சமீப காலமாக இங்கு காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து பிரிந்த என். ஆர். காங்கிரஸும்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர். ஆனால் நாராயணசாமி அரசுக்கு ஆரம்பத்திலிருந்தே உள்ளடி வேலைகள் இருக்கத்தான் செய்தன.
புதுச்சேரி அரசு கவிழ நாராயணசாமிதான் காரணம்.. மக்களுக்கு அவர் என்ன செய்தார்? ரங்கசாமி கேள்வி
பாஜக
ஆனால் அதை சமாளித்து அழகாக ஆட்சி நடத்தி வந்தார் நாராயணசாமி. முதல்வர் கனவுடன் இருந்த நமச்சிவாயத்தை சரிக்கட்டி அமைச்சராக்கி தன்னுடனேயே வைத்துக் கொண்டார். எனினும், யாரால் தனக்குப் பிரச்சினை வரும் என்று நினைத்தாரோ அவர்களால் அவருக்கு ஒரு பிரச்சினையும் வரவில்லை. மாறாக, துணை நிலை ஆளுநராக வந்த கிரண் பேடியால்தான் நாராயணசாமிக்கு ரொம்பவே சிரமம் ஏற்பட்டது. கிரண்பேடியை சமாளிப்பது தினசரி வேலையாகிப் போய் விட்டது அவருக்கு. அந்த அளவுக்கு கிரண் பேடியும் இவரை விடவில்லை. இவரும் சும்மா இருக்கவில்லை.
கிரண்பேடி
தினசரி ஒரு பஞ்சாயத்து நடந்தது. கிரண் பேடியை எதிர்த்து அடிக்கடி போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டங்கள் எல்லாம் புதுச்சேரி வரலாற்றில் இடம் பிடித்து விட்டன. ஒரு ஆளுநருக்கு எதிராக அதிக அளவில் போராட்டம் நடத்திய முதல்வர் நாராயணசாமிதாான். அந்த அளவுக்கு கிரண் பேடியும் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்.
நியமனம்
இந்த நிலையில்தான் 2017ம் ஆண்டு 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தார் கிரண் பேடி. அவர்கள் சங்கர், சாமிநாதன் மற்றும் செல்வகணபதி. இந்த மூன்று பேருமே பாஜகவினர்... இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்தபோதிலும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களை அவர் நியமித்தது தார்மீக ரீதியில் தவறானது என்று வாதம் எழுந்தது. ஆனால் கிரண் பேடி அதைக் கண்டுகொள்ளவில்லை.
ஊதியம்
இந்த நியமனத்தை அப்போது சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் ஏற்கவில்லை. மேலும் அவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும் மறுத்தார். மாத ஊதியம் தரக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இருப்பினும் இவர்களுக்கு கிரண் பேடியே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வழக்குகள்
இந்த நிலையில் ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல சட்டசபைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி 3 நியமன உறுப்பினர்களும் வழக்கு தொடர்ந்தனர். இரு வழக்குகளையும் விசாரித்த அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்றும், அவர்கள் சட்டசபைக்குள் போகலாம் என்றும் கூறி உத்தரவிட்டது.
கிரண்பேடி
அதன் பிறகுதான் இந்த 3 பேரும் தொடர்ந்து எம்எல்ஏக்களாக செயல்பட ஆரம்பித்தனர். இவர்கள் வாக்களிக்கலாம் என்றும் கோர்ட் பின்னர் உத்தரவிட்டிருந்தது. இந்த 3 பேரை வைத்துத்தான் இன்று நாராயணசாமியின் ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர். அதாவது கிரண் பேடி அன்று போட்ட விதைதான் இன்று வளர்ந்து நாராயணசாமி ஆட்சிக்கு முடிவுரை எழுதி விட்டது. ஆக, பதவியில் இல்லாத போதும் கிரண் பேடியின் சபதம் கிட்டத்தட்ட இன்று வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.