நாட்டை துண்டாட துடிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் .. புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Recommended Video
புதுச்சேரி: நாட்டின் விஷ பூச்சியாக ஆர்எஸ்எஸ் இயக்கம் இருக்கிறது. மதத்தின்பேரில் நாட்டை துண்டாக்கி இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லாமியர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு காமராஜரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இக்காலத்தில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. அரசியலுக்கு வருபவர்கள் சம்பாதிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அரசியலில் தியாக மனப்பான்மை வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினோம்.
ஆனால் அதனை செய்யாமல் மகக்ளவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார். உண்மையில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் பதவி விலக வேண்டும். ஆனால் யாரும் பதவி விலகவில்லை. அதற்கு மாற்றாக ராகுல் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்றார் நாராயணசாமி.
மேலும் நாட்டின் விஷ பூச்சியாக ஆர்எஸ்எஸ் இயக்கம் உள்ளதாகவும், மதத்தின்பேரில் நாட்டை துண்டாக்க ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் துடிக்கிறார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணா சாலை - காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சரை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.