சரக்கு கிடைக்கல.. போதை இல்லாமலும் இருக்க முடியல... கஞ்சாவுக்கு மாறும் குடிகாரர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு காரணமாக மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கஞ்சாவுக்கு மது பிரியர்கள் மாறியுள்ளனர்.
அதேசமயம், கஞ்சா விலையும் ஏறிப் போய் விட்டதாம். வழக்கமான நாட்களில் ஒரு பொட்டலம் ரூ.50 விற்பனை செய்யப்பட்டு வந்த கஞ்சா தற்போது ரூ. 500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மதுபானக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
கள்ளச் சந்தையில் விற்பனை
ஊரடங்கு தொடக்கமான முதல் 2 வாரத்தில் கள்ளச் சந்தையில் தாராளமாக மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்ச்சியாக புகார் சென்றதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள், குடோவுன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை 10 மடங்கு விலையேற்றி, சமூக விரோதிகள் கள்ளத்தனமாக விற்பனை செய்தனர்.
அநியாய விலைக்கு
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த புல் பாட்டில் பிராந்தி மற்றும் விஸ்கி 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக மது விற்பனை தடுக்கப்பட்டது. மேலும் மதுகடத்தலுக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உரிமம் ரத்து
அதேபோல் 89 மதுக்கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து மதுபானக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புதுச்சேரியில் மது விற்பனை முழுமையாக தடுக்கப்பட்ட நிலையில், மது போதைக்கு அடிமையானவர்கள் தற்போது கஞ்சாவை நாட தொடங்கியுள்ளனர். ஒரு பொட்டலம் ரூ.50 க்கு விற்கப்பட்ட கஞ்சா தற்போது ரூ.500 க்கு விற்கப்படுகிறது.
கஞ்சாவுக்கு மாறும் இளைஞர்கள்
இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் போதை பிரியர்கள் கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்கள், வாட்ஸ்அப் மூலம் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை சப்ளை செய்து வருகின்றனர். இதேபோல் ஹான்ஸ், குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துகளின் விலையும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. போதை இல்லாமல் இவர்களால் இருக்க முடியலையே.. இப்படி கெட்டுப் போயிருக்காங்களே!