விரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்!
புதுச்சேரி: புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றுவருவதால், மரக்காணம் பகுதியில் சாலையின் ஓரம் இருந்த சிவன் கோவில் ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
கடந்த சில மாதங்களாக புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மரக்காணம் அருகே செட்டி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் தர்ம லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.
தற்போது இப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. எனவே இந்த சிவன் கோவிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாலையை அகலப்படுத்த கிராம மக்கள் மற்றும் கோவில் அரங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் கோவிலை நகர்த்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோவில் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்துக்கு பின் நோக்கி நகர்த்தி வைக்கும் பணி நவீன கருவிகள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1000 ஜாக்கிகள் மூலம் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, வருகிற மே மாதம் சித்ரா பவுர்ணமி நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாக்கிகள் மூலம் கோவில் நகர்த்தும் பணியை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
சமீப காலமாக இதுபோல ஜாக்கிகள் வைத்து கட்டடங்களை நகர்த்துவது அதிகரித்து வருகிறது. வீடுகள், புராதன கட்டடங்கள் இதுபோல நகர்த்தப்படுகின்றன. சாலைகள் உயர்ந்து தெருக்கள், சாலைகள் பள்ளமாகும் பகுதிகளில்தான் இதுவரை ஜாக்கி வைத்து கட்டடங்களை நகர்த்தினர். ஆனால் புதுச்சேரியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிக்காக இதுபோல நகர்த்தப்படுவது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.