நிச்சயித்த பெண் பேச மறுப்பு... வீடியோ காலில் லைவ்வாக தற்கொலை.. புதுச்சேரியில் சோகம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் இளம் வழக்கறிஞர் ஒருவர் வீடியோ காலில் லைவ்வாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோதண்டம். இவரது மகன் சுரேஷ். புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர் காலாப்பட்டு சட்ட கல்லூரியில் படித்தபோதிலிருந்து, அதே கல்லூரியில் பயின்ற கடலூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 27 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருமண அழைப்பிதழ் தேர்வு செய்வதற்காக நேற்று அந்த பெண் புதுச்சேரிக்கு வந்துள்ளார். சுரேசும் அந்த பெண்ணும் அழைப்பிதழ் விற்பனை கடைக்கு சென்று அழைப்பிதழை தேர்வு செய்துவிட்டு, பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்றுவிட்டு இரவு அந்த பெண் கடலூர் சென்றுவிட்டார்.
இதற்கிடையே சுரேஷ் அந்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முயன்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. தொடர்ச்சியாக முயற்சித்த சுரேஷ் இரவு 11 மணியளவில் அந்த பெண்ணுக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது நீ என்னுடன் பேச மறுப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி விட்டு, நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூக்கு மாட்டினார். அதன்பிறகு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தூக்கத்தை துறந்த ஸ்டாலின்... விடிய விடிய நிர்வாகிகளிடம் களநிலவரங்களை கேட்டறிந்தார்
ஏதோ விளையாட்டுக்காகத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என நினைத்தார் அந்த பெண். ஆனாலும் பதட்டம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே சிவசக்தி சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே தூக்கில் இருந்து அவரை மீட்டு கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் தான் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் இளம் வழக்கறிஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.