தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு கருத்தரங்கில் திரளானோர் பங்கேற்பு
புதுச்சேரி: இந்திய அரசாங்கத்தால் தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் தேசிய மரபு அறக்கட்டளையால் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டத்தில் அமையவிருக்கும் உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்ட ஆவணக் கருத்தரங்கம், தேசிய மரபு அறக்கட்டளையின் புதுவை அருங்காட்சியகத்தில் நடந்தது. உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி அதன் சொல் வளத்தாலும் இலக்கிய வளத்தாலும் மக்கள் வளத்தாலும் உலகத்தாரால் போற்றவும் காக்கவும் பட வேண்டிய ஒரு அரிய மொழி. இம்மொழியின் சிறப்புகளை எளிமையாக எடுத்து கூறுவதென்பது யானை கண்ட குருடரைப் போன்றதாகும். தமிழ் இலக்கியத்தின் புகழுக்கு காரணமாக விளங்கும் ஆயிரக்கணக்கான தமிழ்ப்புலவர்களை ஆவணப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடென்பது நம்முடைய வரலாற்று விழிப்பின்மைக்கு அடிப்படையாக விளங்குகிறது.
இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் உலகமெங்கும் வாழ்ந்த வாழ்கிற வாழவிருக்கும் அனைத்து தமிழ் அறிஞர்களையும் தமிழ்சார் அறிஞர்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் ஆவணப்படுத்தி காட்சிப்படுத்துதல் என்பதையே முதற் குறிக்கோளாக கொண்டு, தமிழுக்கான முதன்மை நகரமாக விளங்கும் மதுரை மாநகரில் தமிழை செம்மொழி என்று முதன் முதலில் அறிவித்த சூரிய நாராயண சாசுதரி என்ற இயற்பெயர் கொண்ட பரிதிமாற்கலைஞர் அவர்கள் பிறந்து வாழ்ந்த விளாச்சேரிக்கு அடுத்து உள்ள திருநகரில் 2017-ஆம் ஆண்டு உலக இளைஞர் நாளான ஆகசுடு 12- ஆம் நாளில் மறைந்த தமிழறிஞர் தமிழ், வடமொழி ஆகியவற்றில் இணையற்ற புலமைப்பெற்று இந்தியாவில் 'மகாமகோபாத்தியாய' பட்டமும் பெற்ற 'பண்டிதமணி' மு.கதிரேசனார் அவர்களின் பெயரனாகிய மா. சாத்தப்பன் என்பவரை கொண்டு அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
இதனையொட்டி பல தமிழறிஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியும் வருகின்றது. இதற்கு அடுத்த முயற்சியாக நிலம் வாங்குவதற்கான வேலைகளும் கட்டட அமைப்பு பற்றியான வேலைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. பாரதியின் 'கானி நிலம் வேண்டும்' என்ற வரியினை அடிப்படையாகக் கொண்டு ஒரு கானி அளவிலான ஒரு கட்டட அமைப்பை நிறுவுவதற்கும் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக உலக தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து நல்ல வரவேற்பும் ஊக்கமும் கிடைத்து வருகின்றது. இதனையொட்டி இந்திய அரசால் செம்மொழியாக்கப்பட்ட தமிழ் மொழியின் 15-ஆம் ஆண்டு நிறைவினை தேசிய மரபு அறக்கட்டளை ஒரு கருத்தரங்காக முன்னெடுத்து இந்திய கலையின் நோக்கங்கள் என்று நமச்சிவாயம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய அருங்காட்சியக தந்தை என்று அழைக்கப்படும் ஆனந்த குமாரசாமியின் AIMS OF INDIAN ART என்ற நூலை வாசிப்பிற்கு உட்படுத்தி இது தொடர்பான வினா-விடை நிகழ்வையும் கருத்தரங்கில் நடத்தியது.
அருங்காட்சியக ஊழியர்கள் இக்கருத்தரங்க பேச்சுப்பட்டறையில் பங்கு கொண்டு பயனடைந்தனர். நிகழ்விற்கு புதுவை அருங்காட்சியக நிறுவனர் அறிவன் தலைமை தாங்கினார். மேலும் உலகத் தமிழ் அருங்காட்சியக பொறுப்பாளர் பா.வே.பாண்டியன் காணொளி மூலமாக கருத்தரங்கில் பங்கு கொண்டார். செல்வி தி. மனோரஞ்சினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.