புதுவை திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த கிரண்பேடி, நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோவில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகார மோதலில் இருந்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒன்றாக சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் உள்ளது 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேததிருக்காமீஸ்வரர் கோவில் . தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதுமாக விளங்குகிறது கோகிலாம்பிகை சமேததிருக்காமீஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பிரமோற்சவ விழா 17-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சாமி காட்சி அளித்தார்
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாலன் தீப்பாய்ந்தான் சுகுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
முதலில் விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது. அதன்பின் திருக்காமீஸ்வரர் அம்மன் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்கிய தேரோட்டம் கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து கல் 1 மணி அளவில் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதில் புதுச்சேரி மட்டுமின்றி அருகில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் காரணமாக ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒன்று சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் இருவரும் ஒன்று சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தது குறிப்பிடத்தக்கது.