ஆஹா.. "வால்" முழுவதும் வள்ளுவம் வாழ்கிறதே.. புரட்சி படைக்கும் புதுச்சேரி!
புதுச்சேரி: திருக்குறளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சியாக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியில் வீடுகள் தோறும் திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.
வாழ்வியல் நெறிகளை ஒன்றரை அடியில் விளக்கும் திருக்குறள் உலக மறையாக விளங்குகிறது. திருக்குறளைப் பற்றி தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் புகழ்ந்து பேசுகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்ற தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை. பொதுவாக திருக்குறள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். மேலும் பொது நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் திருக்குறள் வாசிக்கப்பட்டே தொடங்கும்.
அத்தனை ஹெவியான பெட்டியை தூக்கி கொண்டு போன.. சுடிதார் போட்ட பெண்.. கிட்ட போய் பார்த்தா!
புதிய முயற்சி
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருக்குறளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதி மக்கள் புதுமையான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
வீடுகள் தோறும்
அதாவது சுமார் 3 ஆயிரம் வீடுகளை கொண்ட நைனார் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டு சுவர்களில் அவற்றின் உரிமையார்களிடம் அனுமதி பெற்று திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.
அருமையான முயற்சி
இதை அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் படிப்பதால் அதில் உள்ள கருத்துகள் மனதில் பதிவாகி நல்லொழுக்கம் மேலோங்குகிறது. மேலும் திருக்குறளின் அருமை, பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இதனால் தேவையில்லாத விளம்பரங்களால் சுவர் அலங்கோலமாவதும் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
மாணவர்கள்
மேலும் இந்த பகுதி மக்களின் நல்லெண்ண முயற்ச்சிக்கு உதவுவதற்காக அரசின் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள், தங்களுடைய கல்லூரி முடிவடைந்ததும் மாலை நேரத்தில் திருக்குறள் எழுதும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குவிகிறது பாராட்டு
திருக்குறளை பாமரர்களிடம் கொண்டு செல்லும் நைனார் மண்டபம் மக்கள் இயக்கதின் இந்த பணியை மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் பார்த்து பாராட்டிச் செல்கின்றனர். இதேபோன்று பிற இடங்களில் வசிப்பவர்களும் தங்களது வீடுகளில் திருக்குறளை எழுத முன்வருவார்களாயின் வள்ளுவனின் புகழ் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை.