கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைய சரியா சொல்லுங்க.. தமிழக முதல்வருக்கு.. திருமாவளவன் வலியுறுத்தல்..
புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழந்தார்களின் எண்ணிக்கை குறைத்து காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் நகரில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய அரசின் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பிக்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி, கொரோனா விவகாரத்தில் மத்திய மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அரசின் நடவடிக்கைகள் கொரோனாவை தடுப்பதற்கு பதிலாக பரவச் செய்ய ஏதுவாக அமைந்துவிட்டது. கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க தமிழக அரசு எந்த முனைப்பையும் காட்ட வில்லை. முழு அடைப்பு காலத்தில் குறைவாக இருந்த கொரோனா தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அதிகரித்து வருகிறது.
Exclusive: பிரைவேட்டாக போட்ட வீடியோ.. வரதராஜன் விளக்கம்.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதில்
Recommended Video
கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மன நிறைவை அளிக்காமல், கவலை அளிக்கிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தார்களின் எண்ணிக்கை குறைத்து காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிரற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பதில் சொல்லி ஆக வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க வேண்டும். மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மசோதாவை ரத்து செய்து நடைமுறைக்கு கொண்டுவரக்கூடாது என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்றார்.