தனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்
புதுச்சேரி: உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலின் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு டிசம்பர் மாதம் 27 ந்தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கின்றார்.
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. அந்த வகையில் உலகிலேயே சனி பகவானுக்கு தனி சன்னதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளது. பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.
உக்கிரமூர்த்தியாகிய சனீஸ்வரர், இந்த ஆலயத்தில் சாந்த மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன், அருளாசி வழங்கும் அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். சனீஸ்வரர் தன்னை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி அளித்து, எல்லா துன்பங்களையும் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், விரும்பிய பலன்களையும் அளிப்பதாக பக்தர்கள் நம்புவதால், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக் கணக்கான பக்தர்களும் இங்கு வந்து சனி பகவானை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்தாண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.
திருநள்ளாறு கோவிலைப் பொருத்தவரை வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24 ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதாக தகவல் பரவியது. இது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சனீஸ்வரருக்கென்று தனி சன்னதி கொண்டுள்ள தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ந் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தர்ப்பாராண்யேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள சனீஸ்வரர் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தான் சனிபெயர்ச்சி நடைபெறும். வருகிற 27.12.2020 அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது, சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சனிப்பெயர்ச்சி தேதி குறித்து பக்தர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.