குடிகாரர்களிடம் இருந்து மதுபானம் திருடிய 4 புதுச்சேரி போலீசார்.. 3 பேர் அதிரடி கைது.. பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் சோதனையின்போது குடிகாரர்களிடமிருந்து மதுபாட்டில்களை திருடிய வழக்கில் மூன்று போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு காவலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது 4 ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பு மக்களும் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தை சுற்றியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் வராதபடி மாநில எல்லைப் பகுதிகளான கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கோரிமேடு, முள்ளோடை, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் புதுச்சேரி மாநில எல்லைகளில் ஒன்றான திருக்கனூரிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு கடந்த 16 ந் தேதி தமிழக பகுதியான சித்தலம்பட்டு பகுதியை சேர்ந்த தமிழக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் சங்கர் மற்றும் அவரது நண்பர் சோமு ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து 18 மதுபாட்டில்களை விலை கொடுத்து வாங்கி வந்தனர்.
அப்போது திருக்கனூர் சோதனைச் சாவடி அருகே அவர்கள் வந்தபோது, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வம், ஐ.ஆர்.பி.என். காவலர்கள் பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் சங்கர் மற்றும் சோமுவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறித்துக் கொண்டு மீதம் 3 பாட்டில்களை மட்டும் கொடுத்து போலீசார் அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் மதுவை பறித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து காவலர் செல்வம், ஐ.ஆர்.பி.என். காவலர்கள் பிரசன்னா, கோகுலன், மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் 4 பேர் மீதும் திருக்கனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதில் செல்வம், கோகுலன், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பிரசன்னாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு.. புதுவையில் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
அண்மை காலமாக புதுச்சேரி மாநிலத்தில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரே மதுபானங்களை கடத்துவதும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது.