தினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா?
புதுவை: திமுக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் சமீப காலமாக கிளம்பி வருவதால் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்காக முயற்சிகளை காங்கிரஸ் படு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்கள்தான் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் தனித்துப் போட்டியிடும் முடிவையும் திமுக எடுக்கக் கூடும் என்று பேச்சு உள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் கடந்த முறை மானாவாரியாக ஒதுக்கியது போல இந்த முறை ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை என்றும் பேச்சு வலுவாக அடிபடுகிறது.
டிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்
திமுகவுக்கு நெருக்கடி
ஆனால் திமுக ஒதுக்குகிற சொற்ப இடங்களை காங்கிரஸ் ஏற்குமா? என்பது சந்தேகமே. இன்னொருபக்கம், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து திமுக கழற்றிவிடத்தான் வேண்டும் என்ற பாஜகவின் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இதற்கு திமுக தரப்பிலும் ஓகே என சிக்னல் தரப்பட்டுள்ளதாம்.
காங்கிரஸ்-அமமுக
இந்த சூழ்நிலைகளால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் எப்படியும் வெளியேற்றப்படுவது உறுதி என்றே பரபரப்பாக பேசப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்ட காங்கிரஸும் அடுத்த கூட்டணிக்கான ஆயத்தப் பணிகளை படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது உள்ள உடனடி ஒரே ஆப்சன் அமமுகதான்.
திமுகவுக்கு மாற்று
தினகரனின் அமமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள திட்டமிட்டுகிறது. அதாவது கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 3வது அணி போல. அமமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைந்தால் திமுகவுக்கான வாக்குகளை சிதற வைக்கவும் முடியும் என்பது கணக்கு. திமுகவை விட்டு விலக நினைக்கும் கட்சிகளுக்கான புகலிடமாக இந்த அணி இருக்குமாம்.
புதுவையில் தினகரனுடன் அழகிரி ஆலோசனை
இதற்கான பிள்ளையார் சுழியாக புதுவையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தமிழக காங்கிர கமிட்டித் தலைவர் அழகிரி சந்தித்து பேசியிருக்கிறாராம். தமிழக சட்டசபை தேர்தல் களம் நெருங்க நெருங்க அதிரடி திருப்பங்களும் மாற்றங்களும் தமிழக அரசியல் களத்தில் காத்து இருக்கின்றன என்பதையே புதுவை சந்திப்புகள் சொல்லுகின்றன.