இழுத்து மூடப்பட்ட மோசடி டோல்கேட்.. இதுவரை அடித்த கொள்ளைக்கு நிவாரணம் ?.. மக்கள் கேள்வி
Recommended Video
புதுச்சேரி: மத்திய நெடுஞ்சாலை துறையின் விதிகளுக்கு மாறாக புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை தற்காலிகமாக மூடுமாறு விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அது மூடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மக்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்கள். இதுவரை இந்த டோல்கேட் முறைகேடாக அடித்த வசூல் கொள்ளைக்கு நிவாரணம் என்ன. எங்கள் பணத்தை அது திரும்பத் தர வேண்டும். அதற்கும் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறியுள்ளனர்.
புதுச்சேரி அருகே புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த சுங்கச்சாவடியால் உள்ளூர் மக்கள் தங்களது அருகாமையில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு கூட அதிகளவில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருந்துவருகிறது.
இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், லாரி உரிமையாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். ஆனால் சுங்கச்சாவடி அங்கிருந்து அகற்றப்படவில்லை.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையிலான 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் டோல்கேட் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி புதுச்சேரியில் இருந்து 3 கிலோமீட்டர் இடையிலான பகுதியில் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் மகேஷ், ஐயப்பன், பரசுராமன், சத்யராஜ் ஞானமூர்த்தி ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த, நீதிபதி வெங்கடேசன் சுங்கச்சாவடியை வரும் 20 ஆம் தேதி வரை மூடி கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ளவரை சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு மக்களிடயே வரவேற்பு எழுந்துள்ளது. அதேசமயம், இதுவரை இந்த சுங்கச்சாவடி மக்களிடமிருந்து அடித்த வசூல் கொள்ளைக்கு என்ன நிவாரணம் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். அதையும் கோர்ட் தலையிட்டு வசூலித்துத் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்ற கொள்ளைக்கார சுங்கச்சாவடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.