காசு கொடுக்க முடியாது.. வழியை விடு.. டோல்கேட் ஊழியரை தாக்கிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி
Recommended Video
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சுங்கச்சாவடி ஒன்றில் காரில் இலவசமாக செல்ல அனுமதிக்காத ஊழியரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் காரில் இலவசமாக செல்ல அனுமதிக்காத சுங்கச்சாவடி ஊழியரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரண்டான்டி என்ற பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்நிலையில் சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தரார் சுகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் புதுச்சேரியிலிருந்து காரில் சுங்கச்சாவடி வழியாக சென்றார். அப்போது சுங்கச்சாவடியில் பணியிலிருந்த ஊழியர் மணிமாறன், காருக்கான கட்டணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு சுகுமாரிடமா கூறியுள்ளார். ஆனால் அவர், தனது காருக்கான சுங்கச்சாவடி பாஸ் உள்ளது. தற்போது அது முடிந்துவிட்டதால், விரைவில் புதுப்பித்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனால் சுகுமாருக்கும், மணிமாறனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டணத்தை செலுத்துவிட்டு சுகுமார் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் சுகுமார் தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் இரண்டு azமோட்டார் சைக்கிள்களில் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளார். அங்கு பணியிலிருந்த மணிமாறனை அவர்கள் சராமாரியாக தாக்கி, சுங்கச்சாவடி கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்த மணிமாறனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனயில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுங்கச்சாவடி ஊழியர் மணிமாறனை தாக்கிய சுகுமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.