75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்.. பயணிகள் இன்றி வெறிச்சோடிய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் வராததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்கள் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் புதுச்சேரி அரசு 5 ம் கட்ட ஊரடங்கில் கடற்கரை, பூங்காக்கள், சுண்ணாம்பாறு படகு குழாம் ஆகியவற்றை திறக்க அனுமதி அளித்து பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கடற்கரை சாலை திறக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் உற்சாகத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. ஆனால் அங்கு யாரும் வராததால் அவை வெறிச்சோடி கிடந்தன.
இதேபோல் 75 நாட்களாக மூடப்பட்டிருந்த சுண்ணாம்பாறு படகு குழாம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
படகு குழாமின் நுழைவு வாயில், உள்புற நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு அங்கு வருவோர் பயன்படுத்துவதற்காக கிருமி நாசினி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
Nisarga: வாகன போக்குவரத்து நிறுத்தம்.. 7 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு எச்சரிக்கை
படகுகளை சரி செய்து தயார் நிலையில் வைத்து இருந்ததுடன் அவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கும் எதிர்பார்த்தபடி சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. உள்ளூரை சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். இதனால் படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.