போலீசாருடன் இணைந்து கொரோனாவை விரட்டும் திருநங்கைகள்..!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையுடன் இணைந்து திருநங்கைகளும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இது நடைமுறையில் உள்ளது.
கொரோனா.. குஜராத்தில் நிலைமை சரியில்லை.. ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு யோசனையா? உண்மை என்ன?
வீடுகளை விட்டு வரக் கூடாது
இதன் காரணமாக அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, இருசக்கர வாகனங்களில் சுற்றக்கூடாது, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும் ஊரடங்கை மீறி பலர் வெளியே சுற்றுவது தொடர்கிறது.
2314 பேர் மீது வழக்கு
ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் கடந்த 22 நாட்களில், 2,314 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சுமார் 15,745 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே புதுச்சேரி அரசு அறிவித்த கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூபாய் 2,000 அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதியோர் உதவித்தொகையும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்கில் உதவித் தொகை
இவற்றை பெறுவதற்காக மக்கள் வங்கிகளின் முன்பு குவிந்து, சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிவாரணத் தொகையை வாங்கி செல்கின்றனர். மேலும் ஏடிஎம் மையங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினர் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் பணியில் அவர்களுடன் என்சிசி, என்எஸ்எஸ், மற்றும் தனியார் பாதுகாவலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
முகமூடி அணிவது அவசியம்
மேலும் தன்னார்வலர்களும் போலீஸாருடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக வங்கி, மார்க்கெட், ஏடிஎம் மையங்கள், முக்கிய சந்திப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திருநங்கைகளும் ஈடுபட்டுள்ளனர். பாகூர் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள், போலீஸாருடன் இணைந்து, முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள், தேவையின்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும், தேவையின்றி வெளியே வரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மீறுவோருக்கு சில அறிவுறுத்தல்களையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.
பணியில் திருநங்கைகள்
இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆகவே பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸாருடன் இணைந்து பணியாற்ற விரும்பினோம். இதற்காக காவல்துறையுடன் இணைந்து தன்னார்வலர் பணியில் சேர அணுகினோம். அதற்கு அவர்களும் அனுமதித்தனர். இதையடுத்து நாங்கள் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது என தெரிவித்தனர்.