புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் உயிருடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கொக்கு மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி அருகே ஒதியம்பட்டு கிராமத்தில் வனத்துறை சட்டத்தை மீறி கொக்கு மற்றும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து வனத்துறை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறையினரை கண்டதும் கொக்கு மற்றும் கிளிகளை விற்பனை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள், 25 பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கொக்குகள் மற்றும் பச்சைக்கிளிகளை வனத்துறையினர் வனத்திற்கு கொண்டு வந்தனர்.
பறவைகளை விற்பனை செய்தவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். பறவைகளை விற்பனை செய்வது குற்றம்.
அதைவிட அதை வாங்குபவர்களும் குற்றவாளிகள் தான். எனவே பறவைகளை யாரும் வாங்க கூடாது என பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.