டிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்
புதுவை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பூண்டி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் புதுவையில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கொரோனா லாக்டவுன் காலத்தில் புதுவை பண்ணை இல்லத்தில்தான் தங்கி உள்ளார். புதுவையில் இருந்தபடியே பல்வேறு அரசியல் நகர்வுகளையும் தினகரன் மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரியில் பல முக்கிய பிரமுகர்களையும் தினகரன் சந்தித்து பேசி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் தஞ்சாவூர் பகுதியில் பிரபல குடும்பமான பூண்டி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தினகரனின் புதுவை பண்ணை இல்லத்தில்தான் இந்த நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
மணமகன் ராமநாதன் துளசி அய்யாவின் தாத்தா பூண்டி துளசி வாண்டையார் தமிழகம் நன்கு அறிந்த பிரபலம். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பணியாற்றியவர்.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை: ஷாக் ஆகாதீங்க... டீசல் விலையில் மட்டும் சின்னதா மாற்றம்
பூண்டி துளசி வாண்டையார் மகன், கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது மகன் ராமநாதன் துளசி அய்யாதான் மணமகன். இவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலும் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வந்த பின்னர் அவர் தலைமையில்தான் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.