தமிழகத்தில் மட்டுமே போட்டி.. ஒரு சீட் கூட்டணி கட்சிக்கு.. 38 எங்களுக்கு.. பரபரப்பை கிளப்பும் தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி: வரும் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் போட்டியிடப் போவதாகவும், 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்றும், ஒரு சீட்டில், கூட்டணியில் சேரும் கட்சிக்கு தரப்பட்டுள்ளதாகவும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக, திமுக தலைமையில் அணிகள் அமைந்து வருகின்றன. இதை தவிர 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது என்று கமல் தெரிவித்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன் சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு கமல் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்.
அதனால் டிடிவி தினகரன் திமுக, அதிமுக, மற்றும் மக்கள் நீதி மய்யத்துடன் சேரும் சூழல் இல்லை என்று தெளிவானது. அப்படியானால் 4-வது அணி தினகரன் தலைமையில் உருவாகுமோ என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
தனித்து போட்டி
4 தினங்களுக்கு முன்பு கூட சேலத்தில் பேசிய டிடிவி தினகரன், "சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறேன். சில முக்கியமான நபா்களுடன் பேசி வருகிறோம். அநேகமாக 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும்" என்றார்.
38 தொகுதி
அதன்படியே இப்போது தமிழகத்தில் மட்டும் அதாவது 38 தொகுதிகளில் அமமுக போட்டியிட போவதாக தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 38 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். ஒரு தொகுதியை கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிக்கு ஒதுக்கியுள்ளோம்.
21 தொகுதிகள்
38 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். சட்டசபைக்கு இடைத் தேர்தல் வந்தால் 21 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்றார்.
அதிக ஆர்வம்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு அடிமேல் அடி வாங்கிவரும் அமமுகவுக்கு இந்தத் தேர்தல்தான் ஒரே வாய்ப்பு. இடைத்தேர்தல் ஏதாவது ஒன்று நடந்துவிடாதா என்று அதிக ஆர்வமாகவும், அக்கறையாகவும் ஆரம்பத்தில் இருந்தே இருந்தவர் தினகரன் மட்டும்தான். அதனால் இப்போது தனித்து போட்டியிடவும் தயாராகி விட்டார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவைவிட அதிக ஓட்டுகளை பெற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இப்போது தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.