ஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன்
புதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மகள் திருமணத்தை ஆரவாரமின்றி எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும், தனது இல்லத்தில் நடைபெறும் முதல் சுபநிகழ்வு என்பதால் கட்சி பேதங்களை கடந்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தினகரன் அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
சசிகலா விடுதலைக்கு பிறகு அவரது தலைமையில் வரும் தை மாதத்தில் தஞ்சையில் திருமணம் நடைபெறவுள்ளது.
லெபனான்.. 7 வருடம் முன் விளையாடிய விதி.. ரஷ்ய பிஸ்னஸ்மேன் மீது வலுக்கும் சந்தேகம்.. சிக்கும் தலைகள்!
ஆரவாரமின்றி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினிக்கும் பூண்டி வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதனிடையே, தேர்தல் நேரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதால் ஆரவாரமின்றி திருமணத்தை நடத்த தினகரன் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவேற்பு விழா
ஆனால் மாப்பிள்ளை வீட்டாரை பொறுத்தவரை பூண்டி கிராமத்தில் திருவிழாவை போல் வரவேற்பு விழாவை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார்கள். சுற்றுப்பட்டு கிராம மக்கள் அனைவரையும் அழைத்து விருந்து அளிக்க வேண்டும் என்பது வாண்டையார் குடும்பத்தின் பிளான். மகன் திருமண நிகழ்வுக்கு முன்பே கொரோனாவின் தாக்கம் குறைய வேண்டும் அல்லது மருந்து கண்டறிய வேண்டும் என்பது கிருஷ்ணசாமி வாண்டையாரின் வேண்டுதலாக உள்ளது என அவருக்கு நெருங்கிய தஞ்சை கதர்சட்டை பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.
அரசியல் மாற்றம்
சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி தினகரனின் மகள் திருமணம் தான். ஆகையால் அந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக சசிகலாவின் ரீ என்ட்ரிக்கு தினகரனின் மகள் திருமணம் வழியமைத்துக் கொடுக்கும் என அரசியல் பார்வையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கணபதி தெரிவிக்கிறார்.
விவேக், ஜெய் ஆனந்த்
இதனிடையே சசிகலாவின் சகோதரர்கள் மகன்களான விவேக், ஜெய் ஆனந்த் ஆகிய இருவரது திருமணமும் பெரியளவில் ஆடம்பரமின்றியே நடைபெற்றது. காரணம் டிடிவி சுதாகரனின் திருமணம் இன்று வரை பேசு பொருளாக இருப்பது தான். இதனால் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் தினகரன்.