அப்பீல் பண்ணுவோம்.. தேவைப்பட்டால் வேற வேற சின்னத்திலும் போட்டியிடுவோம்.. தினகரன் தில் பேட்டி
புதுச்சேரி: இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் 40 தொகுதிகளிலும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நாங்கள் அதிமுகவின் ஒரு அங்கம் என்று டெல்லி உயர்நீதிமன்றமே கூறியுள்ளதால், புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தால் எங்கள் உரிமையை இழந்து விடுவோம் என்பதால் புதிய கட்சி ஆரம்பக்கவில்லை.
குக்கர் சின்னத்தையும் நம்பியும் நாங்கள் இல்லை. வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பது போல, அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சையாக நின்று, ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னங்களில் நாங்கள் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.
இருந்தபோதிலும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குக்கர் சின்னம் எங்களுக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதின்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தினகரன் தெரிவித்தார்.