லாக்டவுனால் தலைகீழாக மாறிய வரலாறு.. தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மதுபாட்டில்கள் கடத்தல்
புதுச்சேரி: முதல் முறையாக தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து மது கடத்தி வந்த இரண்டு பேரை கைது செய்த புதுச்சேரி போலீசார் அவர்களிடமிருந்து 24 குவாட்டர் பாட்டில் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், பல்வேறு வகையாக மதுபானங்கள் கிடைப்பதாலும் புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து மது குடித்துவிட்டு செல்கின்றனர்.
மேலும் விலை குறைவு என்பதால் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பதும் உண்டு. தற்போது ஊரடங்கு உத்தரவினால் புதுச்சேரியில் மதுபானம், சாராயம் மற்றும் கள்ளுக்கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். மேலும் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் - முதலமைச்சர் நாராயணசாமிக்கு இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
புக்கிங் செய்தால்தான் மருத்துவம் பாப்போம்.. ஜிப்மர் பிடிவாதம்.. விழிபிதுங்கும் ஏழை மக்கள்
இதனிடையே மத்திய அரசு மூன்றாம் கட்டமாக நீட்டித்துள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அளித்துள்ளதால் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த குடிகாரர்கள் அருகில் உள்ள தமிழகப்பகுதியான கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் மது பாட்டில்கள் வாங்கி வந்து மதுகுடித்து வருகின்றனர்
இந்நிலையில் முதல் முறையாக தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் நடந்துள்ளது. திருக்கனூர் காவல்நிலைய போலீஸ் திருக்கனூர் எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார்சைக்கிள் பெட்டிகளில் 24 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன், கோ.மணவெளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும், இவர்கள் விழுப்புரம் அருகே கெடார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி புதுச்சேரியில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வழக்கமாக புதுச்சேரிக்குத்தான் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு சென்று மதுபானங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி குடிமகன்கள் புலம்பி வருகின்றனர்.