காரும் டூவிலரும் மோதல்.. அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்.. ஷாக் சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
புதுச்சேரி: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். நண்பர்களான இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வந்தனர்.
அப்போது கூனிமேடு அருகே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனே அவ்வழியாக சென்றவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில், கார் நேருக்கு நேர் மோதுவதும், இதில் அவர்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபதைக்கும் காட்சிகள் உள்ளன.
சாலையில் தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர் விழுந்த வேகத்தில் அடிபட்டு உட்கார முயல்வதும், முடியாமல் கீழே விழுவதுமாக உள்ள காட்சி பெரும் சோகத்தைத் தருவதாக உள்ளது.