அன்று நாராயணசாமிக்கு கடும் வசை.. இன்று பாராட்டிப் புகழாரம்.. உதயக்குமார் பேச்சால் கலகல
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக சுப.உதயகுமார் மற்றும் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தின் கூடங்குளத்தில் அணுமின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது ஆசிரியராக இருந்த சு.ப. உதயகுமார் தலைமையில் அப்பகுதி மக்கள் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக நூறு நாட்களை கடந்து தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர்.
அந்த காலகட்டத்தில் தற்போது புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள நாராயணசாமி, மத்திய காங்கிரஸ் அரசில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்திருந்த நேரத்தில், முதலமைச்சர் நாராயணசாமியோ கூடங்குளத்தில் நிச்சயம் அணுமின் நிலையம் வரும் என்று ஊடகங்கள் வாயிலாக அவ்வபோது தெரிவித்துவந்தார். அப்போதுதான் முதலமைச்சர் நாராயணசாமி மக்களிடையே பிரபலமடைந்தார் என்றுகூட கூறலாம்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் இவரை கூடங்குளம் நாராயணசாமி என்று புனைப்பெயர் வைத்தும் கூப்பிட்டு வந்தனர். அந்த அளவிற்கு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தீவிரம் காட்டினார். மத்திய அரசும் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் நாராயணசாமியை பலமுறை அனுப்பியுள்ளது. இதனால் சு.ப.உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி மீது கடும் கோபம். சு.ப.உதயகுமார் முதலமைச்சர் நாராயணசாமியை வசைபாடாத நாளே இல்லை. பதிலுக்கு முதலமைச்சர் நாராயணசாமியும் சு.ப.உதயகுமாரை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சு.ப.உதயகுமார், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவுத்து புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.ப.உதயகுமார், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயாணசாமி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது தமிழகத்திற்கு முன்னுதாரணமாக உள்ளதாகவும், முதலமைச்சர் மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், முதலமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது என்றும், இதுபோன்று அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமியை புகழ்ந்து தள்ளினார்.