புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இன்று இரவு முதல் அமலாக வாய்ப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று இரவு புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதுச்சேரி அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு பெரும்பான்மையை இழந்தது. முதலமைச்சர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு புதிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ராஜிநாவை ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று இரவு புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.