30 ஆண்டுகளுக்குப் பின்...புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டு அமலுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து 30 ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய அரசு அமைக்க என்.ஆர். காங்கிரஸ், அதிமுக முன்வரவில்லை.
இதனால் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலுக்குப் பின்னர் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.
புதுச்சேரியில் 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.