தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தே மக்களவை தேர்தலை சந்திக்கும்- மத்திய அமைச்சர்
புதுச்சேரி: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தே தீரும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, வைகோ மற்றும் தேசிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளன.
அமமுக தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என கூறியுள்ளது. ஆனால் அதிமுகவோ ஒத்தையாக நிற்கிறது. இதுகுறித்து அதிமுகவினரை கேட்கும் போதெல்லாம் தேர்தல் நேரத்தில் கூறுகிறோம் என்றனர்.
அத்வாலே
தம்பிதுரை உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகளோ பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றனர். இந்த நிலையில் இதுகுறித்து புதுவையில் இந்திய குடியரசு கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார்.
வலியுறுத்துவேன்
அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும். அமமுகவும் அதிமுகவும் இணைய தினகரனை சந்தித்து வலியுறுத்துவேன்.
விருந்தாளி
ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றார் ராம்தாஸ் அத்வாலே. என்னதான் கூட்டணிக்கான அதிமுக கதவு திறந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினாலும் இப்படியா பாஜக அழையா விருந்தாளியாக செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாறுபாடான கருத்து
பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து முரண்பாடாக உள்ளது.