ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு புதுவையில் தடை.! அமைச்சர் கந்தசாமி உறுதி
புதுவை: புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது உறுதி என, மாநில அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
அமைச்சர் கந்தசாமியின் அறிவிப்பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், மொத்த விற்பனையார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், சிறு வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஐம்பதாயிரமும், பெட்டி கடைகளில் விற்பனை செய்தால் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து புதுவையில் நடைபெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து கால அவகாசம் கேட்டனர். இதனையடுத்து ஜூன் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை சட்டம் புதுவையில் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அமைச்சர் கந்தசாமியிடம் பாஜக எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தீவிரமாக களமிறங்கியுள்ளது புதுவை அரசு. ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது என்ற கோரிக்கையையும் ஏற்க புதுவை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கந்தசாமி, தமிழகத்தில் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறதோ அதற்கெல்லாம் புதுவையிலும் விலக்கு அளிக்கப்படும். நீர்நிலைகள், வாய்க்கால்கள், கழிவுநீர் கால்வாய்களில் எல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து கொண்டு அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல் இனியும் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். மேலும் பேசிய அமைச்சர் கந்தசாமி. இது தொடர்பாக புதுவை அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக கூறினார்
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும். அத்துடன் தற்போது உரிமம் பெறாத பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது .இவற்றின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.