மதவெறி ஆட்டத்திற்காக மத்திய அரசின் ஒத்திகை.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
புதுச்சேரி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை இந்திய அளவில் மதவெறி ஆட்டத்திற்காக மத்திய அரசின் ஒத்திகை என்றும், இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வன்முறை மற்றும் இஸ்லாமியர்கள் படுகொலையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன்,பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பேசிய திருமாவளவன், டெல்லியில் நடைபெற்ற வன்முறை இந்திய அளவில் நடைபெறும் மதவெறி ஆட்டத்தின் ஒத்திகை எனவும்,
நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மதவாதத்தை தூண்டும் பாஜக தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.
டெல்லி வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கபில் மிஷ்ரா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட்டு, வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், டில்லி கலவரம் உலக அரங்கில் இந்தியாவை வெட்கி தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும். ரஜினி மத்திய அரசுக்கு எதிராக முதல் முதலில் கருத்து தெரிவித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கின்றோம்.
சிஏஏ.. மேகாலயாவிலும் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு.. மொபைல் சேவை முடக்கம்
டில்லி கலவரத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினி உளவுத்துறை தோல்வி என்று கூறியிருப்பது அதில் தொடர்புடைய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை குறிப்பிடுவதாகவே உள்ளது. டில்லி கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.
டில்லியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து சிறுபான்மை மக்களால் ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி கலவரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்க்கவோ, ஆறுதலோ சொல்லவில்லை. ஆனால் ஆட்சி பொறுப்பேற்க்கும்போது மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று கூறி விட்டு இப்போது அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.