சட்டசபை தேர்தல்.. விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.. திருமாவளவனும் திட்டவட்டம்!
புதுச்சேரி: திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இந்த முறை அதிக சீட் கிடைக்குமா என்று தெரியாத நிலையில் உள்ளன
காரணம் இந்தமுறை எளிதாக திமுக வென்றுவிடும் என்று அபாரமான நம்பிக்கை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. திமுகவும் அப்படித்தான் நம்புகிறது.
கருணாநிதி இல்லாமல்
திமுக இந்தமுறை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக சந்திக்கிறது. முக ஸ்டாலினே இப்போது எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அவரது தலைமையில் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் திமுக இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.
உதயசூரியன் சின்னம்
கூட்டணி கட்சிகளையும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்றே ஸ்டாலின் விரும்புகிறார். கடந்த முறை அதிமுக இப்படித்தான் கூட்டணி கட்சிகளையும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார். வெற்றியும் பெற்று ஆட்சியை தக்கவைத்தார். ஆனால் காங்கிரஸ்க்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததால் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதாக திமுகவினர் மத்தியில் இன்றும் ஒரு மனக்குமுறல் உள்ளது. இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, இடதுசாரிகள் கட்சிகள் மக்கள் நலக்கூட்டணி ஆரம்பித்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் இன்று வரை பேச்சு உள்ளது,
வற்புறுத்த முடிவு
எனவே திமுக, தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இந்த முறை அதிக இடங்களை விட்டுக்கொடுக்காது என்கிறார்கள். அப்படியே சீட் கொடுத்தாலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே வற்புறுத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனிச்சின்னம்
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று கூறியுள்ளார். வரும் சட்டசபைத் திமுக கூட்டணியில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விசிக தனிச்சின்னம்
வைகோவைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிகவும் வரும் சட்டசபை தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறது. இது தொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று உறுதி தெரிவித்தார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்த பின்பு இப்படி அறிவித்துள்ளார திருமாவளவன்.
திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என மாநில அரசு அரசனை பிறப்பித்து உள்ளது இதற்காக முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இலவச கல்வி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டிய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் இருக்க உறுதி ஏற்போம். இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாது.தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் எனவும் அறிவித்தார்.
ஸ்டாலின் கையில்
வைகோ, திருமாவளவன் இருவருமே தனித்தன்மையை நிரூபிக்க விரும்புகிறார்கள். இதனால்தான் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் இதனை திமுக ஏற்குமா, தொகுதியை குறைத்து தருமா என்ற கேள்வி எழுகிறது. 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற இலக்கு நிர்ணயித்த செயல்பட்டு வரும் ஸ்டாலின், எப்படி இதை அணுக போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.