யோகா "பாடி"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை!
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 28 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 3,859 முதுகலை, 15,430 இளங்கலை மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். மேலும் 189 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, சிறந்த கல்விச்சூழல்களை கொண்டது புதுவைப் பல்கலைகழகம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். தங்களது பெற்றோர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்கள் பெருமை தேடித்தர வேண்டும்.நாங்கள் படிக்கும் காலத்தில் கல்வி வசதிகள் இல்லை. கடுமையான சூழ்நிலைகளுக்கிடையே இங்கு வந்துள்ளோம்.
வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தூய்மையான பல்கலைக்கழகங்கள் பட்டியலில் புதுவை பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
வேளாண்மைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். விவசாயம் நாட்டின் அடிப்படை கலாச்சாரம். வகுப்பறைகளில் நேரம் செலவிடுவதை தவிர்த்து, பல்வேறு இடங்ளுக்கும், கிராமப்புறங்களுக்கும் சென்று அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தாய்மொழியை முதலில் கற்க வேண்டும். அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதன்பின் பிறமொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். அதே நேரம் பிறமொழிகளின் அவசியம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி கற்றுக்கொண்டால் வடநாடுகளில் பணியாற்ற முடியும். ஆங்கிலம் கற்றுக்கொண்டால் உலக நாடுகளில் பணியாற்ற முடியும். முதலமைச்சர் நாராயணசாமி, நாடுமுழுவதும் அரசியலில் பிரகாசிக்க முடிந்தது ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகள் தெரிந்ததால்தான்.
வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அதை தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சேவையாக வழங்குகள் என்றார். மேலும் பேசிய அவர், யோகா பாடிக்கானது. மோடிக்கானாது அல்ல. ஆகவே உங்கள் நலத்தை பாதுகாத்துக்கொள்ள யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!
தொடர்ந்து பேசிய அவர், இந்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை (கவுன்) இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையேயே இன்னும் கடைபிடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், கதர், காதி, பட்டு என இந்திய தொடர்பான உடையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நிர்பயா விவகாரத்தில் சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தைரியம் வேண்டும் என்றார். இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, எம்பிக்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பட்டங்களை வாங்க மறுத்து, மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தியதாலும், கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருவதாலும், பல்கலைக்கழகத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் அழைப்பாளர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெங்கையா நாயுடு வருகையையொட்டி 500 க்கும் மேற்பட்ட உள்ளூர் போலீசாருடன் 3 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்தில் வெங்கையா நாயுடுவை வரவேற்க வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமியை, போலீசார் சோதனை செய்ததால், தன்னை அவமதித்து விட்டதாக கூறி ரங்கசாமி, ஆவேசமாக விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.