கடும் தண்ணீர் தட்டுப்பாடு... பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் காலி... விக்கிரமராஜா பேச்சு
புதுச்சேரி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், சென்னை மக்களுக்கு ஆறு மாதத்திற்கு தண்ணீர் கட்டணத்தை அரசு வசூலிக்ககூடாது என்றும், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் கிடைத்த பின்பு தான் அதற்கான தடையை விதிக்க வேண்டும் என்றார்.
மேலும், ஜிஎஸ்எடி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி கடைகளின் வாடைகைகளை குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு அரசு அதிகாரிகள் பல்வேறு வகையில் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்தும், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். தமிழக அரசு வணிகர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, வணிகர்களுக்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என விக்ரமராஜா வலியுறுத்தினார்.